மூன்று கானா பாடகர்கள் இணைந்து பாடிய கானா பாடல்

மெலோடி, மேற்கத்திய இசை உள்ளிட்ட பல்வேறு ஸ்டைலில் பாடல்கள் வெளியாகி அவ்வபோது தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டாலும், தமிழ் சினிமாவிலும், ரசிகர்களிடத்திலும் கானா பாடல்களுக்கு என்று தனி இடம் உண்டு. அந்த வகையில், தற்போது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் கானா பாடல் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களிடையே மவுசு பெற்றிருக்கும் கானா பாடலில் ஒரு புதுமையை செய்ய நினைத்த புதுமுக இயக்குனர், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற மூன்று பிரபல கானா பாடகர்களை ஒன்று சேர்த்து ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார்.

வர்வின் புரொடக்ஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் கர்ணா, பி.ராமச்சந்திரன், இளவரசு ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் தான் இந்த புதிய முயற்சி அரங்கேறியுள்ளது.

சினிமா இசையமைப்பாளர்களில் கானா பாடல்களுக்கான ஸ்பெஷலிஸ்டான தேவா, தனது கானா பாடலின் மூலம் ஒரு படத்தின் வெற்றிக்கே காரணமாக இருந்த கானா உலகநாதன், தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான பாடகராக உள்ள கானா பாலா ஆகியோர் இணைந்து தான் இந்த கானா பாடலை பாடியுள்ளனர்.

ஒரு கானா பாடலுக்கு, மூன்று பிரபல கானா பாடகர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது தமிழ் சினிமாவில் இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கர் ராம் என்ற புதுமுக இசையமைப்பாளரின் இசையில், அந்தோணி பாக்யராஜ் என்ற புதுமுக பாடலாசிரியர் எழுதியுள்ள இப்பாடலின், பல்லவியை கானா பாலா பாட, சரணத்தை கானா உலகநாதன் தொடர, இசையமைப்பாளர் தேவாவின் குரலில் பாடல் முடிவடைகிறது.

இந்த மூவரில் ஒருவர் பாடினாலே பட்டி தொட்டியெல்லாம் ஹிட் என்ற நிலையில், இந்த மூன்று பேரும் இணைந்து பாடியிருக்கும்  இந்த மெகா ஹிட் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.எம்.தயானந்தன் இயக்குகிறார். புதுமுக இயக்குனரான இவர் இயக்குனர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

தற்போது இப்படத்தின் நாயகன், நாயகி மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. விரைவில் துவங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை மதுரை திருப்பரங்குன்றத்தில் தொடங்கி சென்னையில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Comments

comments